Monday, July 26, 2010

கப்பாபைகஸ் பாசியை மன்னார் வளைகுடா பகுதியில் பரவச் செய்தோரைக் கண்டறிந்து,​​ அவர்கள் மீது 1972-இந்திய வன விலங்கு சட்டத்தின்படி குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்



26 Jul 2010 10:49:18 AM IST

மன்னார் வளைகுடா கடல்வளம் பாதிக்கப்படும் அபாயம்
தூத்துக்குடி,​​ ஜூலை 25:​ மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பெரும் களையாக உருவெடுத்து வருகிறது,​​ "கப்பாபைகஸ் ஆல்வரேசி' என்ற வெளிநாட்டுக் கடல்பாசி.​ ​
​ ​ கடல்வாழ் உயிரினங்களின் புகலிடமாக விளங்கும் பவளப்பாறைகளை,​​ இக் கடல்பாசி கொஞ்சம்கொஞ்சமாக அழித்து வருகிறது.​ ​
​ ​ இக் கடல்பாசிகளை உடனே அகற்றாவிட்டால்,​​ மன்னார் வளைகுடாவின் பவளப்பாறைப் படுகைகள் பாலைவனமாக மாறி,​​ கடல்வளம் பாதிக்கப்படும் என ஆராய்ச்சியாளர்களும்,​​ சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் எச்சரித்துள்ளனர்.
​ ​ மன்னார் வளைகுடா,​​ நாட்டின் நான்கு முக்கிய பவளப்பாறை உள்ள இடங்களுள் ஒன்று.​ இதன் முக்கிய பவளப்பாறைப் படுகைகள் இங்குள்ள 21 தீவுகளையும் சுற்றி அமைந்துள்ளன.​ இவை 1986-ம் ஆண்டு கடல்வாழ் உயிரின தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது.
​ ​ ​ "குழி மெல்லுடலிகள்' எனப்படும் பவளப்பாறைகள் பல்வேறு கடல்வாழ் உயிரினங்களுக்கு,​​ குறிப்பாக மீன் இனங்களுக்கு வாழ ஏற்ற சூழ்நிலையைத் தருகிறது.​ கடல்வாழ் உயிரினங்களுக்கு முக்கிய உறைவிடமாகவும்,​​ உணவு,​​ இனப் பெருக்கத்துக்கு ஏற்ற இடமாகவும் பவளப்பாறைகள் திகழ்கின்றன.​ எனவே,​​ இவற்றை ஆயிரக்கணக்கான மீனவர்கள் பாரம்பரியமாக சார்ந்துள்ளனர்.
​ ​ ​ ​ அரிய வகை கடல்வாழ் உயிரினங்களின் புகலிடமாகத் திகழும் இப் பவளப்பாறைகளுக்கு,​​ கடல்பாசி வடிவில் புதிய ஆபத்து வந்துள்ளதை ஆராய்ச்சியாளர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.
​ ​ ​ பிலிப்பின்ஸ் நாட்டிலிருந்து 1995-ல் கொண்டுவரப்பட்ட கப்பாபைகஸ் ஆல்வரேசி ​(ஓஹல்ல்ஹல்ஹட்ஹ்ஸ்ரீன்ள்​ ஹப்ஸ்ஹழ்ங்க்ஷ்ண்ண்)​ எனப்படும் கடல்பாசி,​​ மன்னார் வளைகுடா தீவுப் பகுதிகளில் உள்ள பவளப்பாறைகளை கொஞ்சம்கொஞ்சமாக அழித்துக் கொண்டிருக்கிறது.​ வேதிப் பொருளான கெராஜின் போன்றவை தயாரிக்க,​​ கடலில் இப் பாசியை தனியார் தொழில் நிறுவனங்கள் வளர்த்து வருகின்றன.​ இப் பாசிகள் பவளப்பாறைகளின் மீது படர்ந்து,​​ அவற்றை முற்றிலுமாக மூடி,​​ ஒளிச்சேர்க்கை நடைபெறவிடாமல் தடுத்து அழித்துவிடும்.​ ​
​ ​ மன்னார் வளைகுடாவில் நடத்தப்பட்ட முதல்கட்ட ஆய்வில் சிங்கிள்,​​ குருசடை மற்றும் பூமரிச்சான் ஆகிய 3 தீவுகளில் உள்ள பவளப்பாறைகளை இப் பாசிகள் ஆக்கிரமித்து,​​ பரவி அவற்றை உயிரிழக்கச் செய்து கொண்டிருக்கின்றன.​ ​
​ ​ கடந்த 18 மாதங்களில் சுமார் 1 ச.கி.மீ.​ அளவுக்கு பவளப்பாறை இடங்களில்,​​ இப் பாசி பெருகி 480-க்கும் மேலான பவளப்பாறை காலனிகளைப் பாதித்து அழித்துள்ளது என்றார்,​​ மன்னார் வளைகுடா பகுதியில் 10 ஆண்டுகளாக பவளப்பாறைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி நிலைய இயக்குநர்,​​ ஜே.கே.​ பேட்டர்சன் எட்வர்டு.
​ ​ ​ இக் கடல்பாசி,​​ வேகமாக வளரக்கூடிய,​​ தடிமனான,​​ சக்திவாய்ந்த சிவப்புப் பாசி வகை.​ 15 முதல் 30 நாள்களில் இருமடங்காக வளரும் தன்மை கொண்டது.​ இது பவளப்பாறை அதிகம் உள்ள இடங்களை பாசி அதிகமுள்ள இடங்களாக மாற்றி,​​ பவளப்பாறை இடங்களின் வடிவமைப்பை மாற்றி அவற்றின் துளைகள்,​​ பிளவுகள் போன்றவற்றைக் குறைத்து விடுகின்றன.
​ ​ ​ இதனால்,​​ இந்த பவளப்பாறைகளை நம்பி வாழும் கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்பட்டு,​​ அதனால் மீனவர்களின் வாழ்வாதாரமே பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
​ உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இந்நிலை நீடித்தால்,​​ மன்னார் வளைகுடாவின் பவளப்பாறை இடங்கள் பாலைவனம்போல மாற நேரிடும்​ என்றும் அவர் குறிப்பிட்டார்.
​ ​ ​ இது குறித்து,​​ சுற்றுச்சூழல் ஆர்வலரும்,​​ கடலோர மக்கள் கூட்டமைப்பு அமைப்பாளருமான ம.​ புஷ்பராயன் கூறுகையில்,​​ பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக இந்தியாவின் சூழல் சீர்கேட்டை ஏற்படுத்தும் கப்பாபைகஸ் பாசியை மன்னார் வளைகுடா பகுதியில் பரவச் செய்தோரைக் கண்டறிந்து,​​ அவர்கள் மீது 1972-இந்திய வன விலங்கு சட்டத்தின்படி குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
​ ​ இது தொடர்பாக,​​ மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின தேசியப் பூங்கா வன உயிரினக் காப்பாளர்
என்.​ சுந்தரகுமாரிடம் கேட்டபோது,​​ மன்னார் வளைகுடா பகுதியில் பெரும் ஆபத்தாக கப்பாபைகஸ் ஆல்வேசி பாசி பரவி வருகிறது.
​ ​ பவளப்பாறைகளை அழித்து வரும் இப் பாசிகளை கடலில் இருந்து அப்புறப்படுத்த வனத் துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.​
இது தொடர்பாக நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு வகை உதவிகள் கோரி மத்திய அரசுக்கு கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.​ மத்திய அரசிடம் இருந்து உத்தரவு வந்ததும் அதற்கான பணிகள் விரைவாக நடைபெறும் என்றார் அவர்.

© Copyright 2008 Dinamani

No comments:

Post a Comment