Friday, June 4, 2010

நாட்டு படகு மீனவர்கள் எதிர்ப்பு

ராமநாதபுரம் : மன்னார் வளைகுடாவில் சுற்றுலா பயணிகளை அனுமதிக்கும் தேசிய பூங்கா திட்டத்துக்கு ,இரு மாவட்டங்களை சேர்ந்த நாட்டு படகு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வரும் ஜூன் 5ம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளனர். அரிய வகை கடல்வாழ் உயிரினங்களை மன்னார் வளைகுடா பெற்றுள்ளதால்,இதற்கு கடந்த 1986ல் "தேசிய பூங்கா' அந்தஸ்து தரப்பட்டது.

இலங்கையில் உள்நாட்டு போர், கடத்தல்காரர்கள் அட்டகாசம் காரணமாக பூங்கா பயன்பாடின்றி இருந்து வந்தது. இலங்கை போர் நிறைவு பெற்று, கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மீண்டும் மன்னார் வளைகுடாவில் தேசிய பூங்காவை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக வேம்பார், கீழக்கரை, மண்டபம், தூத்துக்குடி என நான்கு பிரிவுகளாக பிரித்துள்ளனர். சுற்றுலாப்பயணிகள் இங்கிருந்து 21 தீவுகளுக்கும் சென்று வர அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தீவுகளில் மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஜூன் முதல் வாரத்திலிருந்து அமலுக்கு வரவிருக்கும் இத்திட்டத்துக்கு, நாட்டுப்படகு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ராமநாதபுரத்தில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில், ராமநாதபுரம் மாவட்ட மீன்பிடி தொழிலாளர் யூனியன், தூத்துக்குடி கடலோர மக்கள் கூட்டமைப்பினர் பங்கேற்றனர்.

பின்னர் கடலோர மக்கள் கூட்டமைப்பின் செயலாளர் புஷ்பராயன் கூறியதாவது: தீவுகளில் சுற்றுலா பயணிகளை அனுமதிப்பது பாதிப்பையே ஏற்படுத்தும். பாலிதீன் உள்ளிட்ட அதிகமான கழிவுகள் சேர்ந்து தீவை நாசம் செய்து விடும். மனிதன் தோன்றியதற்கு ஆதாரங்கள் கொண்ட தீவுகள் நிறைய இருப்பதால், இந்த முடிவை அரசு கைவிடவேண்டும். வணிக நோக்கில் இதை செய்வது கண்டிக்கத்தக்கதாகும், என்றார்.

மீன்பிடி தொழிலாளர் யூனியன் தலைவர் பால்சாமி கூறியதாவது: அன்னியசெலாவணியைஅதிகம் ஈட்டித்தரும் மீனவர்களுக்கு அனுமதி மறுத்துவிட்டு, சுற்றுலா பயணிகளுக்கு மட்டும் அனுமதிப்பது நியாயமற்றது. இதை கண்டித்து உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5 முதல் தூத்துக்குடி-ராமநாதபுரத்தின் கடலோர கிராமங்களின் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளோம், என்றார்.

No comments:

Post a Comment